Sunday, October 31, 2010

பினாத்தல் - 3

பினாத்தல் - 2 ன் தொடர்ச்சி...

என்னுள் எப்படி ஆத்திகம் நுழைந்தது என்று என் மனம் சொல்லிக் கொண்டே இருக்கும் போது, நிறுத்து.... நிறுத்து, என நான் இடைமறித்து இன்னொன்றைக் கேட்கலானேன். அது, "நீ, என்னைக் கடவுள் நம்பிக்கை உள்ள ஆத்திகன் என்கிறாய், அப்படியானால் நான் எந்த கடவுளை நம்பி வணங்குகிறேன் சொல்" எனக் கேட்டேன். மனம் சிரித்துக் கொண்டே "நான் உனக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன், அந்தக் கதையின் முடிவில் ஒரு கேள்வி கேட்பேன்", அந்தக் கேள்விக்கான பதிலே நீ எந்தக் கடவுளை நம்புகிறாய் என்பதற்கான பதில் என்றது.

கதை என்றதும் எப்பொழுதும் போல கேட்கத் தயாராய் சம்மனமிட்டு அமர்ந்து கொண்டேன். மனம் சொல்லத் தொடங்கியது. ஒரு நாள் உலகின் ஓவியர்களுக்கு எல்லாம் யாரோ ஒருவரின் ஒரு அறிவிப்பு வந்தது. அது, நான் நாளை ஒரு நாள் முழுதும் உங்களுக்கு என் நிழலைக் காட்சியாகத் தருவேன். என் நிழலை மட்டுமே பார்த்து அந்நிழலை வரைந்து அதனைக் கொண்டு என்னை யார் கண்டறிகிறீர்களோ, அவர்களுக்கு நான் மிகச்சிறந்த பரிசை அளிக்கப் போகிறேன் என்பதாகும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, அது "என் நிழலை ஒவ்வொரு ஓவியனும் தனித்தனியாக ஒரே முறை மட்டும் பார்க்கலாம்" என்பதாகும்,

போட்டிக்கான நாள் வந்தது. தன்னை மிகச்சிறந்த ஓவியர் என்று நினைத்துக் கொண்ட ஓவியர் ஒவ்வொருவரும் நிழலைத் தனித்தனியாகக் காணச் சென்றனர். நிழலைக் கண்டு வந்தவர்கள் ஒவ்வொருவரும் உயரமான உருவமாய், குள்ளமான உருவமாய், பருமனாய், ஒல்லியாய் என பலவிதமாய் தான் கண்ட நிழலை வரைந்தனர். காரணம் அந்நிழலைத் தருபவரின் மேல் விழும் சூரியனின் கதிருக்கேற்ப நிழல் மாறியதே. இது மட்டுமல்ல ஒரு ஓவியர் தான் காணச் சென்ற போது அவருக்கு நிழலே கிடைக்கவில்லை. காரணம் சூரியனின் கதிர்கள் நிழலைத் தரும் உருவத்திற்கு செங்குத்தாய் அமைந்து விட்டதால். இவ்வாறு அனைவரின் ஓவியத்தையும் பார்த்து வெறுத்துப் போன ஒருவன் நிழலே இல்லை என்று ஒருவன் பார்த்துவிட்டுச் சொல்கிறான் என்றால் அதனைக் காணவும் வேண்டுமா என்று தன் கண்களை மூடியவாறு நிழலைக் காணச் சென்று நிழல் விழும் இடத்தைக் கடந்து வெளியே வந்து நிழல் தருபவனே இல்லை என்றும் கூறலானான்.

இப்பொழுது நீ சொல், ஓவியர் ஒவ்வொருவரின் உருவத்தின் நிழலும் வேறுபட்டதாக உள்ளதாலோ, அல்லது நிழலில்லா உருவம் என்று ஒருவன் சொன்னதாலோ அல்லது கண்ணை மூடிக் கொண்டு ஒருவன் உருவமே இல்லை என்று சொன்னதாலோ உருவம் இல்லாததாகி விடுமா, பதில் சொல் என்றது. நானும் சற்று யோசித்து, "உருவம் ஒன்றே, பார்க்கும் விதத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப உருவம் மாறுபடுகிறது என்று சொன்னேன். என் மனதும் சிரித்துக் கொண்டே, " நீ வழிபடும் கடவுளும் ஒன்றே, உனது மனதாகிய எனது நிலையைப் பொறுத்து சில சமயம் நீ கனபதியையும், சில சமயம் விஷ்னுவையும், சில சமயம் அல்லாவையும், சில சமயம் இயேசுவையும் நம்பி வணங்குகிறாய்". ஆனால் உன்னுடைய வேண்டுதல் சேருமிடம் ஒன்றே என்பதை உணராமல் என்று சொன்னது.

நான் வணங்கும் கடவுளைப் பற்றி சற்று புரிந்து கொண்டவனாய், அடுத்து என் மனதைப் பார்த்து அடுத்த கேள்வி கேட்கத் தொடங்கினேன். அது....

பினாத்தல் தொடரும்...

பினாத்தல் -2

பினாத்தல்கள் ஏராளமாக இருந்த போதும் முதலில் எதைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கும் போது என் கண் முன்னே நிற்பது எனது கடவுள் நம்பிக்கை பற்றியது. சற்று பெரியதாக இரண்டு அல்லது மூன்று பினாத்தல்களாகக் கூடச் செல்லலாம் இந்த எனது கொள்கையை. இனி பார்ப்போம் எனது கடவுள் நம்பிக்கையை....

நானும் எனது கடவுள் நம்பிக்கையும்:

எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என எப்போது என் மனதைக் கேட்டாலும் சற்றும் தயக்கமில்லாமல் வந்து விழும் பதில்கள், உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நீ ஒரு ஆத்திகன். நீ ஆத்திகத்தை நம்புகிறவன் ஆனால் ஆன்மீகவாதிகளை நம்புகிறவன் அல்ல. உன்னுள் எப்படி இந்த ஆத்திகம் குடிவந்தது என்று தெரிந்து கொள்ள உனது சிறு வயது காலம் முதல் இன்று வரை சற்று உன் எண்ண ஓட்டத்தைத் திரும்பி பார் என்பதாகவே இருக்கும்.

எனது சிறு வயதைத் திரும்பி பார்க்க திரைப்படங்களில் பின்னோக்கி இழுத்துச் செல்லும் சுழற்சக்கரம் இல்லாமலேயே, மனதால் எனது மூன்றாம் அல்லது நான்காம் வயதுக்கு விரைகிறேன். அங்கு, நான் எங்கள் வீட்டின் பூஜையறையில் எனது தாயோடும், சகோதரர்களோடும், பூஜை செய்ய எல்லாம் தயாரா என்று பார்த்து பூஜையை ஆரம்பிக்கத் தயாராக நிற்கும் எனது தந்தையோடும் நின்று கொண்டிருக்கிறேன்.

அப்பா, பூஜை செய்து முடித்ததும் அனைவரும் சாமியை கும்பிட்டுக் கொண்டிருக்க, நான் எனது தாயின் முந்தானையைப் பிடித்து இழுத்தவாறு, அம்மா... அம்மா... சாமியிடம் என்ன வேண்டிக் கொள்வது என நச்சரிக்கத் தொடங்கினேன். தான் சாமியைக் கும்பிடுவதை நிறுத்தி என்னைப் பார்த்து எனது தாய் எதேச்சையாக, "அதோ சாமி பூஜைக்கு வைத்திருக்கிறோம் இல்லையா வாழைப்பழம், அதை வேண்டுமென்று வேண்டிக் கொள் என்று சிரித்தவாறு சொல்லிவிட்டு மறுபடியும் சாமி கும்பிடுவதில் ஆழ்ந்தாள்.

சாமி கும்பிட்டுவிட்டு, அப்பா எல்லோருக்கும் தீர்த்தம் கொடுத்ததும் அன்றைய பூஜை முடிந்தது. அம்மா படையல் சாப்பாடில் ஒரு பாகம் எடுத்துக் கொண்டு சென்று காக்கைக்கு வைத்து விட்டு, பூஜையறையை ஒழுங்கு படுத்தினாள். பிறகு அனைவரும் சாப்பிட உட்கார்ந்தோம். அம்மா திடீரென்று சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து," சாமியிடம் என்ன வேண்டிக்கிட்ட" என்றாள். நான், " வாழைப்பழம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகச் சொன்னேன்". திடீரென்று என்ன நினைத்தாளோ எனது தாய், சாப்பிட அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்து பூஜையறைக்குச் சென்று வாழைப்பழத்தை எடுத்து வந்து என் கையில் கொடுத்து, "சாமி, நீ கேட்ட பழத்தைக் கொடுத்து விட்டது" எனச் சொன்னாள்.

அவ்வாறு சொன்னதோடு நில்லாமல், நீ இறைவன் மீது எப்பொழுதெல்லாம், நம்பிக்கை வைத்து ஒருமுகமாக நின்று நீ வேண்டுகிறாயோ அப்பொழுதெல்லாம் நீ கேட்டது இப்பொழுது போலவே என்றும் கிடைக்கும் என்றாள். அன்று எனக்கு புரிந்தது, "கடவுள் என்பது நாம் கடவுளின் மேல் வைக்கும் நம்பிக்கையே, நம்பிக்கையே கடவுள்" என்று. அன்றிலிருந்து நான் எனது நம்பிக்கையால், கடவுள் மீது வைத்த நம்பிக்கையால் பல வெற்றி பெற்றிருக்கிறேன். அதையெல்லாம் பார்க்கும் முன் இன்னுமொரு பூஜையின் போது நடந்த சிறு நிகழ்வைச் சொல்லிக் கொள்கிறேன்.

எனது வீட்டில் எப்போதும் நடப்பது போல அன்றும் ஒரு பூஜை நடந்து முடிந்தது. மறுபடியும் நான் வாழைப்பழம் வேண்டிக் கொண்டேன் என என் தாயிடம், வாழைப்பழம் கேட்க, எனது அண்ணன்களும், அப்பாவும் கூடச் சேர்ந்து கொண்டு என் அம்மாவிடம் வாழைப்பழம் கேட்கலாயினர். பூஜைக்கு, எங்கள் வீட்டில் இரண்டு வாழைப்பழங்கள் வைப்பதே அன்று வரை பூஜை முறையாக இருந்து வந்தது. அதனால் இரண்டு பழத்தை எனது தாய் நான்கு துண்டாக்கி எனது இரு அண்ணன்களுக்கு ஆளுக்கொரு பங்கையும், எனக்கு ஒரு பங்கையும், எனது அப்பாவுக்கு ஒரு பங்கையும் பகிர்ந்தளித்தாள்... அதற்கு அடுத்து நடந்த பூஜையிலிருந்து எங்கள் வீட்டுப் பூஜையில் சிறு மாற்றம் இருந்தது, அது....

"பூஜையில் இரு வாழைப்பழங்களுக்குப் பதிலாக நான்காக வைத்து பூஜை செய்யப்பட்டது".... :)))

பினாத்தல் தொடரும்...

Friday, October 29, 2010

பினாத்தல்-1

வணக்கம்...

எனது குழந்தைப் பருவம், பள்ளிப்பருவம், கல்லூரிப் பருவம், எனது பெற்றோர்கள், எனது ஆசிரியர்கள் என பலதரப்பிலும் நான் கற்றுக் கொண்டு சிந்தித்ததை விட இணையம் என்னை அதிகமாகச் சிந்திக்கத் தூண்டியது. சிந்தித்ததின் விளைவு, எனக்குள் நானே பினாத்த தொடங்கி விட்டேன். அந்த பினாத்தல்களின் கோர்வை தான் இவை...

இணையம் எனக்கு, பல நண்பர்களையும், மகிழ்ச்சியையுமே பெரும்பாலும் தந்திருந்த போதும் சில கசப்புகளையும் தந்தே இருக்கிறது. இணையத்தில் நடக்கும் விவாதங்களும், ஒவ்வொருவரும் தான் பின்பற்றும் கொள்கையினை நிரூபிக்க அவர்கள் தரும் வரலாற்று ஆதாரங்களும் என்னை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

கம்ப்யூனிசம், சோஷலிஸம், நாத்திகம், ஆத்திகம், காந்தீயம், ஏகாதிபத்தியம், பெண்ணியம், ஆணாதிக்கம் அப்பப்பா எத்தனை விதமான கொள்கைகள்... முதலில் படிக்க சுவாரஸியமாக இருந்தாலும், நாளாக நாளாக இந்த இஸங்களின் வாதங்களைப் பார்த்து பார்த்து எனக்கு இஸம் என்று சொன்னாலே விஷம் எனச் சொல்வது போலக் கேட்கலானது.

அப்பொழுது தான் எனக்கு புரிந்தது ஒரு விஷயம். விவாதம் செய்வோர் அனைவரும் தாங்கள் பின்பற்றும் கொள்கையே சிறந்தது எனச் சொன்னாலும் அவர்களின் கொள்கைகளில் சிற்சில குறைபாடுகள் உள்ளது என்பதை அனைவரும் புரிந்தே வைத்திருந்தனர். இருந்தும் தனது பெரும்பான்மையான கருத்துகள் அக்கொள்கையோடு ஒத்துப் போவதால் தான் பின்பற்றும் கொள்கையினை விட்டுத் தரவில்லை என்பதும் புரிந்தது.

ஒவ்வொரு கொள்கைக்கும் ஆரம்பம் என்று பார்த்தால் எவனொ ஒரு தலைவன் அதற்கு ஆதாரமாய் இருந்திருக்கிறான். கொள்கையை உருவாக்கிய தலைவர்களின் வரலாற்றைப் பார்த்தோமானால் பெரும்பாலும் ஊருக்குத்தான் உபதேசம் என்பது போல வாழ்ந்திருக்கிறார்கள். எப்பொழுது ஒரு கொள்கையைத் தன்னால் பின்பற்ற இயலவில்லையோ அப்பொழுது அந்த கொள்கையை மற்றவர்க்குச் சொல்ல அந்த தலைவன் அருகதை அற்றவனாகிறான். நாம் இதனைச் சொல்ல அருகதை அற்றவன் என்று எண்ணாமல் தமக்கு தோன்றியதை எல்லாம் தானே உலகுக்கு மிகச்சிறந்த வழிகாட்டி என பிதற்றிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒவ்வொரு கொள்கையையும் உருவாக்கியவனின், இந்த அருகதை அற்ற தன்மையே இன்று அக்கொள்கையின் பலவீன்ங்களாகக் காட்சியளிக்கிறது...

வரலாற்றை உருவாக்க வேண்டிய இன்றையத் தலைமுறையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனப் பார்த்தால், தான் கொண்ட கொள்கையின் வரலாற்றையும், தனது கொள்கைக்கு மாற்று கருத்தாக உள்ளதெல்லாம் போலியான்வை என நிரூபிப்பதிலும் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றைப் படிப்பதைத் தவறென்று நான் சொல்லவில்லை. வரலாற்றைப் படித்தோமா, தான் படித்த கொள்கைகளில் இருக்கக் கூடிய நன்மைகள் எனக் கருதுபவற்றை எல்லாம் ஒன்றாக்கி தனக்கென்று ஒரு புது கொள்கையை உருவாக்கி புது ஒரு வரலாற்றை உருவாக்கினோமா என்றல்லாமல் தான் பின்பற்றும் கொள்கையே சிறந்தது என வாதிட்டு வாதிட்டு பழைய வரலாற்றிலேயே தனது காலத்தைக் கழிக்கிறார்களே அன்றி புது வரலாற்றை ஒருவரும் இன்ரைய சூழலில் உருவாக்க முன்வரவில்லை என்பதே நிஜம்.

இதனைக் கண்டே நான் இன்று தொடங்கி இருக்கிறேன் எனது கொள்கைகளை பினாத்தல்களாக... இங்கு நான் பினாத்தப் போவது எல்லாம் எனது தனிப்பட்ட கொள்கைகள். நான் ஆன்மீகத்தை, சாதீயத்தை, பெண்ணியத்தை, சக மனிதனை எப்படிப் பார்த்தேன், இப்பொழுது எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றியது தான் இந்த பினாத்தல். இதன் ஆரம்பமும் முடிவும் நானே. நான் கொண்ட கொள்கையின் மீது யாரேனும் சந்தேகம் எழுப்பினால் நான் பதிலிடப் போவதில்லை. நான் உயிருடன் இருக்கிறேன் என்பது எத்தனை நிஜமோ அத்தனை நிஜமானது எனது கொள்கைகளும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தங்களுக்கு எனது கருத்தில் மாற்றுக் கருத்து இருந்தால், நிச்சயமாக இருக்கும், அவையனைத்தும் உங்கள் கொள்கைகளாகக் கொண்டு நீங்கள் ஒரு புது வரலாற்றை உருவாக்குங்கள்...

பினாத்தல் தொடரும்...